கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஆக-30 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசுகடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.
நாட்டின் வேறு பகுதிகளில் இல்லாத அளவில், கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து நான்கு நாளாக 30,000-ஐ கடந்து பதிவாகியிருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 29,944 ஆகப் பதிவாகியிருக்கிறது. அதன் மூலம், மொத்தம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,87,572-ஆக உயா்ந்துள்ளது.மேலும் இதுவரை 20,884 பேர் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | கரோனா மூன்றாவது அலை: குழந்தைகளை காக்கும் பாரம்பரிய மருந்துகள்!
நோய் பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா கடந்த வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா். அதனைத் தொடா்ந்து, மாநிலத்தில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் கூறியதாவது:
நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-30 ஆம் தேதி (திங்கள்கிழமை)முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், கரோனா வார பாதிப்பு விகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அவா் கூறினாா்.