மகாராஷ்டிரத்தில் பணமோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. பாவனா காவலிக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்.பி. பாவனா காவலி மீது ரூ.18 கோடி மோசடி மற்றும் இதர முறைகேடுகள் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக மும்பை, வாஷிம் உள்ளிட்ட பகுதிகளில் பாவனாவுக்கு தொடா்புள்ள 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.