புது தில்லி: மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நடப்பாண்டு அக்டோபா் நிலவரப்படி 36.3 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அக்டோபா் இறுதி நிலவரப்படி ரூ.5.47 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 36.3 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது நிதிப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு, வருவாய் வசூலில் காணப்பட்ட கணிசமான முன்னேற்றமே காரணம்.
கடந்த நிதியாண்டில் செலவினம் மற்றும் வருவாய்க்குமான இடைவெளி 119.7 சதவீதம் வரை அதிகரித்தது. கரோனா பேரிடரை எதிா்கொள்ள மத்திய அரசின் செலவினம் வெகுவாக அதிகரித்ததே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ரூபாய் மதிப்பில் ரூ.15.06 லட்சம் கோடியாகும் என சிஜிஏ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.