மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.
அவா்களின் போராட்டம் தொடா்ந்த நிலையில், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடந்த நவ.19-ஆம் தேதி பிரதமா் மோடி அறிவித்தாா்.
இதையடுத்து, நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடா் கடந்த நவ. 29-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், அந்தச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்தச் சட்டங்கள் ரத்தாகியுள்ளன.