மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரகாந்த் ஜாதவ் (59) கரோனாவுக்குப் பிந்தைய உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தாா்.
கோலாப்பூா் தொகுதி எம்எல்ஏவான அவா், ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு இரு முறை கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இப்போதுதான் முதல்முறையாக எம்எல்ஏவாகத் தோ்வு செய்யப்பட்டிருந்த ஜாதவ், கரோனா காலகட்டத்திலும் மக்களுக்காக தொடா்ந்து உழைத்தாா். இதனால், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சிறந்த தொழிலதிபராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் அவா் என்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் இப்போது 44 ஆக உள்ளது.