கரோனா தொற்று பரவலுக்கு எதிராக 100 சதவிகித கரோனா தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலம் எனும் சாதனையை ஹிமாச்சலப்பிரதேசம் படைத்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தகுதிவாய்ந்த 53,86,393 பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அனைத்து மக்களுக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளன.
100 சதவிகித இலக்கை அடைந்ததற்காக ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் கரோனா முன்களப் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜீவ் சைசல் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.