பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் ஜலந்தர் பகுதியில் பிரசாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், 'பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், ஆம் ஆத்மி வெற்றியடைந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.
பின்னர், ஹோஷியர்பூர் பகுதியில் பின்தங்கிய வகுப்பின மக்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்கிறார்.
ஒருநாள் பயணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.