முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். வெலிங்டன் ராணுவக் கல்லூரியைச் சேர்ந்த கேப்டன் வருண் சிங் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | விபின் ராவத் பலி: விமானப் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. பணியின்போது உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்தகால தன்னலமற்ற சேவை, விதிவிலக்கான வீரம் என்றும் குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.