முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர்,
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவ.29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், சிவசேனை, திரிணமூல், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று போராட்டத்தை ரத்து செய்துள்ளனர்.
முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய அவையில் தாங்கள் பங்கேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.