கடந்த ஒரு ஆண்டாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க | ராணுவ வீரர் உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்து
அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரதமர் நரேந்திரமோடி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறப்பட்டது.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | 13 பேரின் உடல்கள் சூலூர் கொண்டு வரப்பட்டன
அதற்காக விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ள நிலையில் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 11ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளதாகவும், ஜனவரி 15ஆம் தேதி விவசாயிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.