ஹெலிகாப்டர் விபத்து: மேல்சிகிச்சைக்காக‌ பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார் கேப்டன் வருண்சிங்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங், உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்.
ஹெலிகாப்டர் விபத்து: பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் வருண் சிங்
ஹெலிகாப்டர் விபத்து: பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் வருண் சிங்


பெங்களூரு: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் உள்ள கேப்டன் வருண் சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார்.

கோவை மாவட்டத்தின் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

45 சத தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வருண் சிங்கிற்கு 3 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக கேப்டன் வருண் சிங், ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டார். எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஆம்புலன்ஸ் விமானத்தில் இருந்து வருண் சிங், இந்திய விமானப் படைக்கு சொந்தமான கமாண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் கொண்ட குழுவினர் வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மக்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், "வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் கேப்டன் வருண் சிங்கிற்கு உயிர்காப்புக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

இதனிடையே, கேப்டன் வருண் சிங்கின் தந்தை கர்னல்(பணி ஓய்வு) கே.பி.சிங் கூறுகையில், "மும்பையில் இருந்து நான் வெலிங்டன் வந்துள்ள நிலையில், என் மகன் வருண் சிங் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து நான் எதுவும் கூறமுடியாது" என்று கூறினார்.

2020-ஆம் ஆண்டு வானத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஆபத்தான நிலையில், தான் செலுத்திவந்த எல்சிஏ தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக கடந்த ஆக.15-ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் வருண் சிங்கிற்கு சௌர்ய சக்ரா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com