மும்பையில் கைப்பேசி அழைப்பை தோழி எடுக்காததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த இளைஞர் மனவ் லால்வானி(24). இவர் தனது தோழி மற்றும் நண்பர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்றிருக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய மனவ் லால்வானி, தனது தோழியை கைப்பேசி மூலம் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் மனவ் கைப்பேசி அழைப்பை அவர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனவ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தனது மகன் தற்கொலை செய்துகொண்டிப்பதை செவ்வாய்கிழமை காலை கண்ட பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் தோழியை அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.