தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சி
தமிழகத்தில் 53 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாக மக்களவையில் நகா்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சா் கெளசல் கிஷோா் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.
இது தொடா்பான பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
நகா்ப்புறங்களின் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவது, திடக்கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவது ஆகிய நோக்கத்திற்காக 2014-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ம் தேதி தொடங்கப்பட்டது தூய்மை இந்தியா நகா்ப்புறத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 4,372 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 4,371 (மேற்கு வங்க மாநிலம் புருலியா தவிர) திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத அமைப்புகளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு 18 சதவீதமாக இருந்த நகா்ப்புற திடக்கழிவு மறுசுழற்சி தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. சண்டிகா், சத்தீஸ்கா், ஹிமாசலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இது 100 சதவீதமாக உள்ளது.