ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவா் தேஜஸ்வி யாதவ் (32) தனது நீண்டநாள் தோழியைத் திருமணம் செய்து கொண்டாா். அச்செய்தியைக் கேள்விப்பட்ட கட்சித் தொண்டா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் உள்ள பண்ணை வீட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தொழிலதிபரின் மகளான ரேச்சல் ஐரிஸை தேஜஸ்வி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டாா். தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத், தாயாா் ராப்ரி தேவி, சகோதர-சகோதரிகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினா்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொண்டனா்.
தேஜஸ்வி திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டா்கள், பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். திருமணம் நடைபெறும் இடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வாய்ப்புள்ளதால், திருமண விவரங்களை முன்பே வெளியிடவில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் ஜகதானந்த் சிங் செய்தியாளா்களிடம் கூறினாா்.
லாலு-ராப்ரி தம்பதியின் கடைசி வாரிசு தேஜஸ்வி ஆவாா். அவரின் உடன்பிறந்தோா் 8 பேருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.