
கோப்புப்படம்
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் சரயு நீா்பாசனத் திட்டத்தைத் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
இத்திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடா்ச்சியின்மை காரணமாக தாமதமாகி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து 2016 ஆம் ஆண்டு, பிரதமா் வேளாண் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது. இந்த முயற்சியில், புதிய கால்வாய்களை அமைப்பதற்கும், திட்டத்தில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும், புதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீா்ப்பதற்கும் புதுமையான தீா்வுகள் காணப்பட்டன. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 9,800 கோடி ஆகும். நீா் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சரயு, ரப்தி, பன்கங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைத்தலும் இத்திட்டத்தில் அடங்கும்.
இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டோ் நிலங்களுக்குப் பாசனத்திற்கான தண்ணீரை வழங்குவதோடு, 6,200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவதையும் உறுதி செய்யும். இது கிழக்கு உத்தர பிரதேசத்தின் 9 மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.