புது தில்லி: புது தில்லியில், மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நான்கு பேருமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், புது தில்லியில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறினார். மற்ற ஐந்து பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், புது தில்லியில், ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை சமூகப் பரவலாக மாறவில்லை. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்து, ஒமைக்ரான் சந்தேகத்தின் அடிப்படையில், 74 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.