இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நாடாளுமன்ற விவாகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
“இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து எம்.பி.க்களுடன் தனித்தனியே அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குறைந்தபட்ச வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளேன்.
இன்றைய கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 50 எம்.பி.க்கள் மனு அளித்தனர். அவர்களில் 26 பேருக்கு அவைத் தலைவர் அனுமதி அளித்திருந்தார். இதில், திரிணமூல், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரே கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்த பின் அவைகளுக்கு வர அழைப்பு விடுகிறேன். அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.”
இதையும் படிக்க | ‘நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது’: ராகுல் காந்தி
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணமூல், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.