குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை இன்னும் 6 மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சீரம் இன்ஸ்ட்டிடியூட் திட்டமிட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற தொழில் துறை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியது:
"குழந்தைகளிடம் தீவிர நோய் பாதிப்பு இருப்பதைப் பெரிதளவில் நாம் பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் குறித்த அச்சம் இல்லை.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு; 252 பேர் பலி
இந்தியாவில் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்கள் தடுப்பூசிக்கான உரிமத்தை வாங்கியுள்ளனர். அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதில் எந்தத் தீங்கும் கிடையாது. இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் பலனளிக்கக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான எங்களுடைய கோவோவேக்ஸ் தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் வரவுள்ளது. அது தற்போது பரிசோதனையில் இருக்கிறது. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தேவையான சிறப்பான தரவுகள் பரிசோதனையில் கிடைத்துள்ளன." என்றார்.