முன்னணி மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று (டிச.13) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்தார்.
அவர் பேசியதாவது, பாரா விளையாட்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பான இந்திய பாராலிம்பிக் குழுவிற்கு, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம்கள், போட்டி வெளிப்பாடுகள், தேசிய போட்டிகளை நடத்துதல், உபகரணங்களை வாங்குதல் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பாரா விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய ஆதரவை வழங்குவதற்காக 'முன்னுரிமை' பிரிவில் பாரா விளையாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
தடகள வீரர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் பிரத்யேக பயிற்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.