புது தில்லி: உத்தரகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்துக்காக இரண்டு வழித்தடங்களையும் விரிவுபடுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தரகண்டில் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனிதத் தலங்களை (சார்தாம்) இணைக்க ரூ.12,000 கோடி செலவில் 900 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. சீன எல்லை வரை செல்லும்விதமாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், 2018}ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றி நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலமும் 5.5 மீட்டருக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ""சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான சூழலில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா}சீனா எல்லையில் உள்ள ராணுவ முகாம்களுக்கு படைகள் மற்றும் தளவாடங்களை அனுப்ப சாலைகளை மேம்படுத்த வேண்டும். ராணுவத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்ய நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை 7 மீட்டர் முதல் 7.5 மீட்டர் வரை அதிகரிக்க வேண்டியது அவசியம். எனவே இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பேசுகையில், ""சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள் நாட்டின் பாதுகாப்புக்குத் தீவிர சவால்களை விடுத்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு சார்தாம் நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை அதிகரிக்க அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.