நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இரு அவைகளிலும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்யக் கோரி அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் அவைகள் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை அவைகள் கூடியதிலிருந்து அமளியை தொடர்ந்தனர். இதையடுத்து மாநிலங்களவை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலிலும் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.