ஷீனா போரா காஷ்மீரில் உயிரோடு இருப்பதாக, இந்திராணி முகர்ஜி, சிபிஐக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா பாராவை கொலை செய்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பீட்டர் முகர்ஜிக்கும், அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை, ஷீனா போரா காதலித்ததால், இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜி, சிபிஐக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், பைகுல்லா சிறையில் பணியாற்றும் சிறைத்துறை அதிகாரி ஒருவர், தான் ஸ்ரீநகருக்கு சுற்றுலா சென்ற போது, அங்கு ஷீனா போராவை பார்த்ததாக தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது மகள் ஷீனா போரா, காஷ்மீரில் இருக்கிறாரா என்று தேடிப் பார்க்குமாறு சிபிஐயை இந்திராணி முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்துக் கூற சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.