மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலுக்கு சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நாளை மகாராஷ்டிரம் செல்லவிருக்கிறார். நாளை (சனிக்கிழமை) அகமதுநகர், சீரடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற சாய்பாபா கோயிலுக்குச் செல்கிறார். அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நண்பகல் ஆர்த்திக்கு முன்னதாக அமைச்சர் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மும்பை, புணே, அகமதுநகர் ஆகிய இடங்களில் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.
சனிக்கிழமை மும்பையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமை புணே செல்கிறார். அங்கு மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பதுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அதைத் தொடர்ந்து, தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். புணே மாநகராட்சியின் கீழ் வரும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும் அங்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மார்பளவு சிலையைத் திறந்து வைக்கிறார்.
இந்த பயணத்தின்போது மாநில பாஜக தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.