புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பஞ்சாப் மாநிலத்துக்கு அருகே அத்துமீறி பறந்து கொண்டிருந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டார் அருகே பறந்து கொண்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கருப்பு நிறத்தில் ஒரு பொருள் சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் வேலியிலிருந்து 150 மீட்டர் தொலைவிலும் பறந்து கொண்டிருப்பத எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன், ஹெக்ஸா காப்பரால் செய்யப்பட்ட 4 பேட்டரிகளுடன் இயங்கும் வகையில், 23 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது சுமார் 10 கிலோ எடை கொண்ட பொருளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் டிரோன் பறந்த இடத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.