மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மாநிலத்தில் 48 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிப்புக்குள்ளான 8 பேரில் 4 பேர் மும்பை விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்கள். அதில் ஒருவர் மும்பையைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஜல்கானைச் சேர்ந்தவர்.
இதையும் படிக்க | ஹிந்து யார், ஹிந்துத்வவாதி யார்? மோடியைக் குறிவைக்கும் ராகுல்
மற்ற இருவரில் ஒருவர் சத்தீஸ்கரையும் மற்றொருவர் கேரளத்தையும் சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுதவிர மற்ற இருவர்களில் ஒருவர் தன்சானியாவுக்கும் ஒருவர் பிரிட்டனும் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
மீதமுள்ள 4 பேரில் 3 பேர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை. இந்த மூவரும் உகாண்டாவிலிருந்துத் திரும்பியுள்ளனர். இவர்கள் சதாராவைச் சேர்ந்தவர்கள்.
மற்றொருவர் புணேவைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் சர்வதேச பயணி ஒருவருடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்.