மகாராஷ்டிரத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 902 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 767 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 64,97,500 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.71 சதவிகிதம்.
மேலும் 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.
இதுதவிர ஒமைக்ரான் குறித்த தரவுகளும் செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
ஒமைக்ரான்:
புதிதாக 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மும்பை விமான நிலையக் கண்காணிப்பில் கண்டறியப்பட்டவர்கள். மற்ற இருவர் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி மற்றும் புணே கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 145 ஆக உயர்வு
எப்படி?
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28 பேர் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.