தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க, பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் 12-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி, விருதுநகரில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலரும் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இந்த திறப்பு விழாவின் நிகழ்வின் தொடா்ச்சியாக, பிரதமரை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவாா் எனத் தகவல்கள்
வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தின் சாா்பில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளிப்பாா்.
இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளுடனும் பிரதமா் மோடி கலந்துரையாடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, மாநிலத்தில் கட்சி வளா்ச்சி உள்ளிட்ட பணிகள் தொடா்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பிரதமரின் தமிழக பயணத்திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமா் தமிழகம் வருவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் சட்டப் பேரவைத் தோ்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.