பனாஜி: கோவாவில் 2022ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில், குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள், தாங்கள் ஏன் அவர்களை தேர்வு செய்தோம் என்ற காரணத்தை விளக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விதிமுறை இருந்தும்கூட, இதற்கு முன்பு இது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த விதிமறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்திகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்சிகள், தாங்கள் தேர்வு செய்திருக்கும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்த காரணத்தை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். அவர்களது இணையதளத்தில் அது பற்றி தெரிவிக்க வேண்டும். இவர்களை நாங்கள் இதற்காக தேர்வு செய்திருக்கிறோம். இவர்கள் மீது இந்தக் குற்றப்பின்னணிகள் உள்ளன. ஆனால் இதற்காக நாங்கள் இவரை தேர்வு செய்துள்ளோம். இவரது தொகுதியில், இவரை விட வேறொருவர் எங்களுக்கு சிறந்தவராகக் கிடைக்கவில்லை என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் விளக்க வேண்டும் என்று பனாஜியில் செய்தியாளர்களை சந்தித்த சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.