குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை 45 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்றே நிறைவு பெறுவதாக இரு அவைகளிலும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்து வெங்கைய நாயுடு பேசியதாவது:
“மாநிலங்களவை திட்டமிட்டதைவிட குறைவாகவே செயல்பட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி இல்லை. மொத்தம் திட்டமிடப்பட்ட 95 மணி நேரம் 6 நிமிட கூட்டத்தில் வெறும் 45 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றன. 18 அமர்வுகளில் 47.90 சதவீத பணிகள் நடைபெற்றன.
கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 12 கூட்டத்தொடரில் 5வது குறைவான பணிகளை மாநிலங்களவை பதிவு செய்துள்ளது. ஒத்திவைப்பு மற்றும் இடையூறுகளால் 49 மணி நேரம் 32 நிமிடங்கள் வீணாகின. மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 21 மணி நேரம் 7 நிமிடங்கள் மசோதாக்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன.”