உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் குக்ரி, 32 ஆண்டு சேவைக்குப் பிறகு வியாழக்கிழமை ஓய்வு பெற்றது.
ஐஎன்எஸ் குக்ரி கப்பலை மஸகான் டாக் கப்பல்கட்டும் நிறுவனம் கட்டியது. கடந்த 1989-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அக்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேற்கு, கிழக்கு கடற்பகுதிகளில் அக்கப்பல் பல்வேறு பணிகளில் திறம்பட ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படைக்கு சேவையாற்றிய 32 ஆண்டுகாலத்தில், ஐஎன்எஸ் குக்ரி கப்பலானது 6,44,897 கடல்மைல் தூரம் பயணித்துள்ளதாகக் கடற்படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொலைவானது உலகை 30 முறை சுற்றி வருவதற்கோ அல்லது நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவில் 3 மடங்குக்கோ சமமாகும்.
இத்தகு பெருமை கொண்ட ஐஎன்எஸ் குக்ரி கப்பல், சேவையில் இருந்து வியாழக்கிழமை விடைபெற்றது. அதற்கான நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. சூரியன் மறையும் நேரத்தில் தேசியக் கொடி, கடற்படைக் கொடி உள்ளிட்டவை கப்பலில் இருந்து கீழிறக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படைப் பிரிவின் தளபதி வைஸ் அட்மிரல் விஸ்வஜித் தாஸ்குப்தா, ஐஎன்எஸ் குக்ரி கப்பலை வழிநடத்திய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.