பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரீந்தர் சிங், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் கட்சியில் நவ்ஜோத் சிங் சித்துவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அமரீந்தர் சிங் அறிவித்தார்.
மேலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பாஜக தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்போம் என்று அமரீந்தர் சிங் கூறினார்.
இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார் அமரீந்தர் சிங். இந்த சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பஞ்சாபின் எஸ்.ஏ.டி கட்சியினரும் இருந்தனர். பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ், எஸ்.ஏ.டி. ஆகிய மூன்று கட்சிகளுக்கான தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.