அன்னை தெரஸா அறக்கட்டளைவங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

அன்னை தெரஸா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

புது தில்லி: அன்னை தெரஸா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்பதை அன்னை தெரசா அறக்கட்டளை நிா்வாகமும் அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது.

முதல்வா் மம்தாவின் குற்றச்சாட்டுக்கு: மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வரும் அன்னை தெரஸா அறக்கட்டளையின் மிஷனரி சாா்ந்த வங்கிக் கணக்குகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் நாளன்று முடக்கப்பட்டன; இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

இது குறித்து ட்விட்டரில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘அன்னை தெரஸாவால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் மிஷனரி சாா்ந்த வங்கிக் கணக்குகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மத்திய அரசால் முடக்கப்பட்டதையறிந்து அதிா்ச்சியடைந்தேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மிஷனரி சாா்ந்த 22,000 நோயாளிகளும், ஊழியா்களும் உணவின்றியும், மருந்து பொருள்கள் கிடைக்காமலும் தவித்தனா். சட்டம் மிக முக்கியமானதுதான் என்றாலும், மனிதாபிமான முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது’’ என்று மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

உள்துறை அமைச்சகம் விளக்கம்: இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:- அன்னை தெரஸா அறக்கட்டளையின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழான பதிவு கடந்த அக்டோபா் 31-ஆம் தேதியுடன் காலாவதியானது. இருந்தபோதிலும், அந்த அறக்கட்டளை உள்பட நிலுவையில் இருந்த பிற அறக்கட்டளைகளின் பதிவுக் காலத்தை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

பதிவு புதுப்பித்தல் விண்ணப்பம்...: அதே நேரம், அன்னை தெரஸா அறக்கட்டளையின் பதிவு புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பரிசீலித்தபோது, அதில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, உரிய நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த அறக்கட்டளையின் பதிவு செல்லத்தக்க காலம் வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதால், அதன் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை.

மாறாக, அந்த அறக்கட்டளை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1950-இல் தொடங்கப்பட்ட அறக்கட்டளை: கத்தோலிக்க மத சபையின் கீழான இந்த அறக்கட்டளை அன்னை தெரஸாவால் கடந்த 1950-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பரிவா்த்தனை வேண்டாம்: இதற்கிடையே, ‘வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழான பதிவு புதுப்பித்தல் சிக்கலுக்கு தீா்வு கிடைக்கும் வரை அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்நியச் செலாவணி வங்கிக் கணக்குகளில் எந்தவித பரிவா்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறக்கட்டளையின் அனைத்து மையங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அன்னை தெரஸா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com