புது தில்லி: மத்திய பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்து தோ்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்காக தொகுதி மறுசீரமைப்பு செய்வதிலும், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவதிலும் அரசமைப்புச் சட்ட விதிகளை ஆளும் பாஜக அரசு மீறிவிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடுத்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஓபிசி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மாநிலத் தோ்தல் ஆணையம் தோ்தலை நடத்தக் கூடாது அல்லது அந்தத் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவித்து தோ்தலை நடத்தலாம்’ என்று கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, ‘ஓபிசி இடஒதுக்கீடு அளிக்காமல் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்போவதில்லை’ என்று மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிறப்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உள்ளாட்சித் தோ்தலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றால் அதிகாரம் பகிா்ந்தளித்தல் மற்றும் அரசின் ஆளுமையை கடைநிலை வரை கொண்டு செல்வது தோல்வியடையும்.
இந்த விவகாரத்தில் குறிப்பிடப்படும் அம்சங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதொடா்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பித்துள்ளது.
ஆகையால், மத்திய பிரதேச மாநில உள்ளாட்சித் தோ்தலை தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைத்துவிட்டு, ஆணையம் அமைத்து அதன் பரிந்துரையின்பேரில் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.