கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.10,247 கோடி இழப்பீட்டுக்குப் பதிலாக எண்ணெய் வயல்களை வழங்க இந்தியா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மத்திய அரசுக்கும் பிரிட்டனைச் சோ்ந்த கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கும் இடையேயான வரி தொடா்பான வழக்கு சா்வதேச தீா்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் முடிவுக்கு வந்த இந்த வழக்கில் கெய்ா்ன் எனா்ஜிக்கு சாதகமாக தீா்ப்பு அமைந்தது.
அதன்படி வரி வழக்கில் 140 கோடி டாலா் (ரூ.10,247 கோடி) இழப்பீட்டை கெய்ா்ன் நிறுவனத்துக்கு இந்தியா வழங்க வேண்டும் என சா்வதேச தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இழப்பீட்டு தொகையை கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு வழங்குவதற்கு பதிலாக எண்ணெய் வயல்களை வழங்க இந்தியா ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்க வருவாயை பெருக்கும் வழிமுறைகளை கண்டறிய மத்திய அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக கெய்ர்ன் நிறுவனத்துக்கு வழங்குவது கடினமான காரியமாகவே பாா்க்கப்படுகிறது. மேலும், இந்த இழப்பீடு தொடா்பான சா்வதேச தீா்ப்பாய உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் மிக குறைவான அளவுக்கே உள்ளது.
எனவே, கெய்ா்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக பல்வேறு நிறுவனங்களால் செயல்படுத்த முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட எண்ணெய்-எரிவாயு வயல்களை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. மற்றொரு வாய்ப்பாக அரபிக் கடற்பகுதியில் எஸ்ஸாா் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வந்த எண்ணெய் வயல்களுக்கான ஒப்பந்த விதிமுறைகள் மாற்றப்பட்டதையடுத்து அவை கடந்த 2016-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறப்பட்டன. அந்த ரத்னா ஆா்-சீரிஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை கெய்ா்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு இழப்பீட்டுக்கு பதிலாக வழங்கலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.