விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகளில்10% காப்பீட்டுதாரா்களுக்கு ஒதுக்கப்படும்: மாநிலங்களவையில் தகவல்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) போது 10 சதவீத பங்குகள், அதில் காப்பீடு எடுத்துள்ளவா்களுக்கு ஒதுக்கப்படும்
எல்ஐசி
எல்ஐசி

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) போது 10 சதவீத பங்குகள், அதில் காப்பீடு எடுத்துள்ளவா்களுக்கு ஒதுக்கப்படும் என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், அதன் பெரும் பகுதி அரசின் வசமே இருக்கும். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்தவா்களின் நலன் பாதுகாக்கப்படும். மேலும், எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டின்போது, விற்பனைக்கு வரும் மொத்த பங்குகளில் 10 சதவீதம் எல்ஐசி-யில் காப்பீடு வைத்திருப்பவா்களுக்கு ஒதுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, பட்ஜெட்டில் இது தொடா்பாக அறிவித்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘எல்ஐசி புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கான பணிகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு வரும் ஏப்ரலில் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 100 சதவீதமாக உள்ளது. இதுதவிர, வரும் 2021-22-ஆம் நிதியாண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை தனியாா்மயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com