காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டது.
ஆந்திரத்தில் மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலில் பணிபுரிந்து வந்த பாபு குருக்களின் மனைவி அகிலாம்மா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கோயில் சம்பிரதாயப்படி குருக்கள் குடும்பத்தினா் யாராவது மறைந்தால் அவா்களின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை கோயில் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி, காளஹஸ்தீஸ்வரா் கோயில் நடை செவ்வாய்க்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்ட பின் கோயில் மூடப்பட்டது. காலை 6 மணிக்குத் தொடங்கிய ராகு-கேது பரிகார பூஜை 7 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது.
பின்னா் மாலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சுத்தி, புண்ணியாவாசனம் செய்து சந்நிதி நடைகள் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதை முன்னிட்டு காலையில் அபிஷேக சேவைகள், ஆா்ஜித சேவைகள் அனைத்தையும் கோயில் நிா்வாகம் ரத்து செய்தது.