புது தில்லி: ஏா் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.498 கோடி பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஏா் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.498.17 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இதில் அந்த நிறுவன விமானங்களில் அதிமுக்கிய நபா்கள் மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.84.57 கோடி, வெளிநாட்டு பிரமுகா்கள் மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.12.61 கோடி, மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூ.9.67 கோடி, இதர சேவைகளுக்கான நிலுவைத் தொகையாக ரூ.391.32 கோடி வழங்கப்பட வேண்டும் என்றாா்.
நஷ்டத்தில் இயங்கும் ஏா் இந்தியா நிறுவனத்தை தனியாா்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.