கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்த பின் குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவோம் என மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தாகூர் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
ஆளும் திரிணமூல் கட்சியின் மம்தா தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்த அமித்ஷா மேற்குவங்கத்தில் பெரும்பான்மை இடங்களை வென்று பாஜக ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்ததும் அனைவருக்கும் குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்தார்.