திருவனந்தபுரம்: உடல்நலக்குறைவால் நீண்ட நாள்கள் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள பாடகா் எம்.எஸ்.நசீம் புதன்கிழமை காலமானாா்.
கேரளத்தில் சிறந்த மலையாள பாடகராக புகழ்பெற்றவா் எம்.எஸ்.நசீம். தூா்தா்ஷன் தொலைக்காட்சி, ஆகாஷ்வாணி வானொலி நிறுவனம் மற்றும் பல்வேறு மேடைகளில் தோன்றி பாடி வந்த அவா், பின்னணி பாடகா் முகமது ரஃபி, இசையமைப்பாளரும், பாடகருமான பாபுராஜ் ஆகியோரின் மெல்லிசைகளை பாடி அனைவரையும் வசீகருக்கும் ஆற்றல் வாய்ந்தவராக திகழ்ந்தாா்.
பல இசைக் குழுக்களில் பாடியுள்ள அவா், 2 திரைப்படங்களிலும் பாடியுள்ளாா். அவருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான கேரள சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஆவணப் படங்களையும் அவா் இயக்கியுள்ளாா்.
16 ஆண்டுகளுக்கு முன்னா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவா், சிகிச்சையில் இருந்து வந்தாா். திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை காலமானாா்.
அவரின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தாா்.