உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்துக்குள்ளான பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ரிஷிகங்கா நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்ததால், மீட்புப் பணிகள் சற்றுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளது எண்று கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சமோலி மாவட்ட இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி இன்று (பிப்.11) 5-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 35 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.