கரோனா பெருந்தொற்றின் போது ஓய்வூதியதாரர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
கரோனா பெருந்தொற்றின் போது ஓய்வூதியதாரர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் அச்சங்களை போக்குவதற்காக 20 நகரங்களில், ஓய்வூதியர்களை சென்றடையும் வகையில் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவைக் கொண்டு காணொலி உரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. யோகா குறித்த இணைய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
கரோனா பெருந்தொற்றின் போது மின்னணு முறைகளை பின்பற்றி சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது. மேலும், தபால்காரர்களின் மூலம் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று சான்றிதழை பெறும் சேவையும் தொடங்கப்பட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.