ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர செல்வந்தர்களுக்கு அல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், செல்வந்தர்கள், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்களுக்கான அரசு என்றால் ஊரக சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய பட்ஜெட்டை தொழிலதிபர்களுக்கு ஆதரவான பட்ஜெட் போல பொய்யான பிம்பத்தை எதிர்க்கட்சிகள் கட்டமைக்கின்றன
தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துவோரை மத்திய அரசு மதிக்கிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறையின் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை அளிக்காததால், உதவித் தொகை இன்னும் சென்றடையாத நிலை உள்ளது என்று கூறினார்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருள் வழங்கப்படுகிது. 8 கோடி மக்களுக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஏழைகள், முதியோர், விதவைப் பெண் போன்ற 4 கோடி மக்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என்று கூறினார்.