சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி நிவாரண உதவிகளை மாநில அரசு உடனடியாக செய்துதர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.