சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு நேரிட்டது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.