உத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரிஷிகங்கா நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்ததால், நேற்று மீட்புப் பணிகள் சற்றுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்துக்குள்ளான பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.