இன்று உலக வானொலி நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. வானொலியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
வேறெந்த தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடியாக இருப்பது வானொலி. ஒரு காலத்தில் வானொலி வைத்திருப்பவர் தான் பணக்காரர் என்ற நிலையும், வானொலி இல்லாத வீடுகளே இருக்காது என்ற நிலையும் காணப்பட்டதே வானொலியின் பெருமையை பறைசாற்றும் விஷயங்களாகும். செய்திகளை அறியவும், திரைப்படப் பாடல்களைக் கேட்கவும் வானொலி ஒன்றுதான் ஒரே தொலைத்தொடர்பு சாதனமாக விளங்கியது.
பரபரப்பு செய்திகளாகட்டும், பயனுள்ள தகவல்களாகட்டும் படிக்காத பாமரர்களுக்கும் அதனைக் கொண்டு சேர்த்ததில் வானொலியின் பங்கு அளப்பரியது.
இன்று எத்தனையோ தொலைத்தொடர்பு சாதனங்களும் நிகழ்ச்சிகளும் வந்துவிட்டாலும், வானொலியில் கேட்ட இன்று ஒரு தகவலோ, ஒலிச்சித்திரமோ தந்த அந்த உணர்வை நிச்சயம் ஈடுசெய்ய முடியாது என்பதே அந்தக் காலத்து மக்களின் ஒரே குரல்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்த மக்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சாதனத்தின் வடிவம் இன்று மாறிப் போனாலும், அதன் நினைவுகள் என்றும் பசுமையாகவே இருக்கிறது.
எனவே, மனித வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்த வானொலியின் முக்கியத்துவம் குறித்து இன்றைய கால மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ஆம் தேதி வானொலி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.