இந்தியாவின் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி ரூ.338 கோடியை எட்டியுள்ளதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கரோனா தடுப்பூசி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடங்கியது. இந்த நிலையில், பிப்ரவரி 8 நிலவரப்படி மொத்தம் ரூ.338 கோடி மதிப்புக்கு இந்திய கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், நடப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட மானிய தடுப்பூசியும் அடங்கும்.
சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் இண்டா்நேஷனல் நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசியைப் பொருத்தவரையில் மத்திய அரசு உள்நாட்டு தேவைக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் பிறகே, நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
உள்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருந்து உற்பத்தி நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
கரோனா தடுப்பூசி திட்டத்தை பொருத்தவரையில், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது என்றாா் அவா்.