கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்படக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மாகாராஷ்டித்தின் தாணேவில் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில்,
மாவட்டத்தின் கிராமப்புறங்களில் மட்டுமே கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் 50 சதவீத வருகை மட்டுமே அனுமதிக்கப்படும். கல்வி நிறுவனங்கள் அனைத்து கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தாணேவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி புதிதாக 354 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 2,57,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று காரணமாக 6,202 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.