உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் ஒரு உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 11-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டன்ட் ஆதித்ய பிரதாப் சிங், இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்காக சுரங்கத்தில் தோண்டும்போது தண்ணீர் வருகிறது. அதனை மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறோம். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.