ஆலங்குளம்: முக்கூடல் அருகே திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புக்குட்டி மகன் செல்லதுரை(45). விவசாயியான இவர் திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி செயலராக பதவி வகித்து வந்தார்.
மறியலில் ஈடுபட்டு வரும் செல்லதுரை உறவினர்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை ஊருக்கு வடபுரம் உள்ள தோட்டத்தில் வளர்த்து வரும் கால்நடைகளை அடைப்பதற்காக தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது எதிரே வந்த அவரது உறவினர் ராசு குட்டி மகன் ஐயப்பன் அரிவாளால் வெட்டியதில் படுகாமயடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் முக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறையினர்.
செல்லத்துரைக்கு பிரேமா என்ற மனைவியும் ஊர்மிளா(8) என்ற மகளும் ஐயப்பன்(6) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கொலையாளியை கைது செய்யக்கோரி செல்லதுரையின் உறவினர்கள் முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்வோம் என உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர். போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்குள் கைது செய்யாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் உறவினர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் முக்கூடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.